Saint Ignatius Church Kurumpanai
குமரி மாவட்டம் இணையத்தில் புதிதாக சர்வதேச சரக்கு பெட்டகமாற்று முனைய துறைமுகம் ஒன்றை சுமார் ரூ.26,570 கோடி ரூபாய் செலவில் அமைக்கப் போவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் மட்டும் செயல்படுத்தப்பட்டால் இணையத்தைச் சுற்றியுள்ள 8 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 20000 குடும்பங்கள் தங்கள் கிராமங்களையும் வாழ்வாதாரங்களையும் விட்டு நிரந்தரமாக வெளியேற்றபடுவர்.
சரக்கு பெட்டக மாற்று முனைய துறைமுகம் என்றால் என்ன ?
வர்த்தக துறைமுகத்தில் இருந்து சற்று வித்தியாசமானது சரக்கு பெட்டக மாற்று முனையம். வர்த்தக துறைமுகம் என்பது வணிகரீதியான ஏற்றுமதி – இறக்குமதி நடைபெறும் துறைமுகம். சரக்கு பெட்டக மாற்று முனையம் என்றால் தாய் கப்பல்கள் என்ற மிகவும் பிரமாண்ட கப்பல்கள் மூலமாக இங்கு வந்து அவற்றில் இருக்கின்ற கண்டெய்னர்கள் இறக்கப்பட்டு சிறிய கப்பல்கள் மூலமாக பல்வேறு துறைமுகங்களுக்கு அனுப்பப்படும். இதுதான் சரக்கு பெட்டக மாற்று முனையம்.
சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் ஏதேனும் பயன் உண்டா?
ஏற்கெனவே கொச்சி வல்லார்படத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் சரக்கு பெட்டக மாற்று முனையம் ஒன்று செயல்பட்டு வருகிறது . 2015 அறிக்கையின் படி 10 லட்சம் TEU சரக்குகள் கையாளக் கூடிய கொள்ளளவு கொண்ட துறைமுகத்தில் வெறும்17000 TEU சரக்குகள் மட்டுமே கையாளப்படுகிறது.கொழும்புவில் உள்ள சரக்கு பெட்டக மாற்று முனையத்தின் கட்டணம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாலும் வசதிகள் அதிகமாக இருப்பதாலும் சர்வதேச கடல் தடத்திற்கு மிக அருகில் இருப்பதாலும் பெருங்கப்பல்கள் தொடர்ந்து கொழும்பு துறைமுகத்திற்கே செல்கின்றன. இவ்வாறு இருக்கையில் இணையத்தில் இருந்து வெறும் 27கி.மீ தொலைவில் உள்ள விழிஞ்சத்தில் மற்றுமொரு சரக்கு பெட்டக மாற்று முனையம் மோடிக்கு மிகவும் நெருக்கமான அதானி குழுமத்தினரால் கட்டப்பட்டு வருவதே வேடிக்கையானது. அதுபோதாதென்று தற்போது இணையத்திலும் மற்றுமொரு சரக்கு பெட்டக மாற்று மையம் அதானி குழுமத்தினரால் கட்டப்படப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது. ஏற்கனவே மிகவும் நெருக்கமாக 2 சரக்கு பெட்டக முனையம் உள்ள நிலையில், அதிலும் வல்லார்படம் துறைமுகம் போதிய கப்பல் போக்குவரத்தின்றி இன்றும் நட்டத்தில் இயங்கும் வேளையில் மூன்றாவதாக துறைமுகம் எதற்காக? யாருடைய நலனுக்காகஅமைக்கப்பட உள்ளது? என்ற கேள்வி எழுகிறது.
வாழ்வாதார, சுற்றுச்சூழல் பாதிப்புகள்:
குமரி மாவட்டம் தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்து மக்கள் மிக நெருக்கமாக வாழும் மாவட்டமாகும். அழகிய கடற்கரைகளும் அடர்த்தியான மலைகளும் 30 சதவீதம் ரிசர்வ் காடுகளும் கொண்ட இயற்கை எழில்மிக்க பகுதியாகும். இந்த துறைமுகம் மட்டும் வரக்கூடுமானால் இந்த இயற்கை வளங்களுக்கு கடுமையான பாதிப்புகள் உண்டாகும்.
இத்துறைமுகம் அமைவதால் இணையம் முதல் குளச்சல் வரையிலான 10கி.மீ நீளம் கடலோரப் பகுதிகள் 5 சதுர கி.மீஅளவிற்கு மக்களுக்கு நிரந்தர இழப்பு பகுதியாக மாறும் என்று ஸ்பெயின் நாட்டை சேர்ந்த டிப்ஸா நிறுவனம் நடத்திய தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இது போக இதர கட்டுமானங்களுக்காக துறைமுகப் பகுதியை ஒட்டி 7.5 சதுர கி.மீ நிலப்பகுதி கையகப்படுத்தப்படும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
துறைமுகத்தை தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் வகையில் 10.5கி.மீ தூரத்திற்கு ஆறுவழிச்சாலையும், 11 கி.மீ தூரத்திற்கு இருப்புபாதையும் அமைப்பதற்கு 157 ஹெக்டர் நிலபரப்பு கையகப்படுத்தப்படும் என்றும் ஆய்வறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது. மிக நெருக்கமாக மக்கள் வாழும் இப்பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர். இது போக விவசாயப்பெருமக்களின் வாழ்வாதாரமான நிலங்களும், குளங்களும் பல பழமை வாய்ந்த பாரம்பரியமிக்க மத வழிப்பாட்டு தலங்களும் கையகப்படுத்தப்படும். ஆக இத்திட்டத்தினால் ஏறத்தாழ 2 லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்தும் வாழ்வாதாரப் பகுதிகளில் இருந்தும் வெளியேற்றபடுவர். இப்படி வெளியேற்றம் செய்யப்படவுள்ள மக்களுக்கு முறையான மாற்று வாழ்வாதாரங்களோ இருப்பிடங்களோ குமரி மாவட்டத்தில் ஏதும் இல்லை. இது போக துறைமுகம் அமைப்பதற்காக கடலில் கற்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதற்கு பல ஆறுகளும் அருவிகளும் ஊற்றெடுக்கும் மேற்கு தொடர்ச்சி மலையைப் பெயர்த்தெடுத்து நிரப்ப உள்ளனர். இத்தகைய ஓர் அழிவுத் திட்டத்திற்கான துறைமுக கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள அதானி குழுமத்தினரை தவிர வேறு யாருக்கும் பயனளிக்கப் போவதில்லை என்பது தெளிவாகிறது.
எண்ணூர் முதல் குமரி வரை மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக மீனவ மக்களின் வாழ்வாதரங்களை பாதிக்கும் வகையில் தொடர்ச்சியாக திட்டங்களை வகுத்து வருகின்றனர்.எண்ணூர் துறைமுகம்,எண்ணூர் எண்ணெய் கசிவு, ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து மீனவ மக்களின் மீதான வன்முறை, கல்பாக்கம் அணு உலை, தமிழக கடற்கரை முழுக்க அமையவுள்ள அனல் மின் நிலையங்கள், ராமேஸ்வர மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல், கூடங்குளத்தில் அணு உலை பூங்கா என தொடர்ச்சியாக மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மீனவ மக்களின் வாழ்வை அழிக்கும் வகையிலேயே உள்ளது.
இணையம் துறைமுகத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் எண்ணூர் துறைமுக விரிவாக்கதிற்காக அதானி குழுமம் அலையாத்திகாடுகளை அழித்ததையும் கொசஸ்தலை ஆற்றை மாசுபடுத்தி, மீன்வளம் குன்ற செய்ததையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். துறைமுக விரிவாக்கத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டதன்றி வேறெந்த நலனையும் அத்திட்டம் பயக்கவில்லை என்பதும் நாம் அறிந்ததே. தற்போது கட்டப்பட்டு வரும் விழிஞ்சம் துறைமுகத்தின் ஒப்பந்தமும் அறிவிக்கப்பட்டு இருக்கும் இனையம் துறைமுக கட்டுமான ஒப்பந்தமும் அதானி குழுமத்திற்கே அளிக்கப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியது. அதானி போன்ற கார்பரேட் நிறுவனங்களின் இலாப வெறிக்காக மீனவ மக்களின் வாழ்வாதாரமகிய கடல் வளங்களை சிதைக்கவும் மீனவர்களைத் தமது வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்தவும் தொடர்ச்சியாக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது அரசு. பழவேற்காடு முதல் குமரி வரை உள்_ள மீனவர்கள் ஒன்றிணைந்து தங்கள் வாழ்வாதரங்களை காக்கப் போராடுவது இன்றைய சூழலில் அத்தியவசமாகிறது.